இன்றும் நாளையும் கோவை மற்றும் நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், இன்று ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். குறிப்பாக, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால், அதே நேரத்தில் இன்றும் நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யும் என்றும், ஆனால் அதே நேரத்தில் பகல் நேரத்தில் அதிகபட்சமாக 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதால், இன்னும் கோடை காலம் முடிவடையவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், ஒடிசா அருகே வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும், அது மேற்கு வங்க கடலோர பகுதி வழியாக கடந்து செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.