Publish Date: Mon, 16 Apr 2018 (14:33 IST)
Updated Date: Mon, 16 Apr 2018 (18:23 IST)
காஷ்மீரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி ஆஷிபா குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா கடத்தப்பட்டு ஒரு கோவிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். அந்த சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து சிலர் அவரை சீரழித்துள்ளனர். 7 நாட்களில் ஒரு கோவிலில் அந்த சிறுமியை அடைத்து இந்த கொடுமையை சிலர் செய்துள்ளனர். அதன்பின் அந்த சிறுமியை கொடுமையாக தாக்கி கொலை செய்து தூக்கி எறிந்தனர்.
3 மாதத்திற்கு பின்பு வெளிச்சத்திற்கு வந்த இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், அந்த கோவிலின் அறக்கட்டளை நிர்வாகி, அவரின் மகன், ஒரு காவல் அதிகாரி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நாடெங்கும் வலுத்துள்ளது.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த ஹெச்.ராஜா, இந்த விவகாரத்தில் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் எனக் கூறினார். மேலும், கதவே இல்லாத கோவில் சிறுமியை எப்படி அடைத்து வைத்திருக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை மயக்கத்தில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என செய்தி வெளியான பின்பும், ராஜா இப்படியொரு கேள்வியை எழுப்பியதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.