Publish Date: Sun, 13 Oct 2019 (17:49 IST)
Updated Date: Sun, 13 Oct 2019 (17:50 IST)
பிரதமர் வந்து சென்ற பிறகு தமிழக பாஜகவில் கோஷ்டி மோதல் உருவாகி உச்சகட்டத்தைத் தொட்டுள்ளது.
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அரசு முறை வரவேற்புகள் முடிந்த பின்னர் தமிழக பாஜக நிர்வாகிகள் அவரை சந்திப்பது வழக்கம். பாஜக தலைவராக தமிழிசை இருந்தவரை இந்த சந்திப்புகள் முறையாக திட்டமிடப்பட்டு அனைத்து நிர்வாகிகளையும் அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் இப்போது அவர் இல்லாததால் தமிழக்த்தின் முக்கியத் தலைவராகக் கருதப்படும் பொன் ராதாகிருஷ்ணன் தனக்கு வேண்டியவர்களை மட்டும் அழைத்துச் சென்று சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர் அழைத்துச் சென்றவர்களில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் கூட இடம்பெறவில்லை என சொல்லப்படுகிறது. குறிப்பாக அழைத்துச் செல்லப்படாதவர்கள் அனைவரும் முன்னாள் தலைவர் தமிழிசையின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனையை இப்போது டெல்லி வரைக் கொண்டு செல்லவுள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா. ஏற்கனவே கமலாயத்தில் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையை காலி செய்ய சொல்லிவிட்டு தேசிய செயலாளரான ஹெச் ராஜாவுக்கு அறை ஒதுக்கிய விவகாரத்தில் இருவருக்கும் இடையே இருந்த புகைச்சல் இப்போது வெடிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.