Publish Date: Thu, 04 Oct 2018 (12:59 IST)
Updated Date: Thu, 04 Oct 2018 (13:02 IST)
ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்திருந்தபடி இன்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய ஓய்வூதிய ஒப்பந்தத்தை நீக்கி பழைய பென்ஷன் திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு இன்று வேலை நிறுத்தப் போரட்டத்தை அறிவித்திருந்தது.
அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் போன்ற வருவாய்த்துறை அலவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பகுதியினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பணிகள் முடங்கியுள்ளன.
சென்னை எழிலகத்தில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு அரசுக்கெதிரான முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணப்பாளர் தாஸ் கூறியதாவது ’ஏழாவது ஊதிய திட்டத்தால் ஐந்து லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை நாங்கள் அரசிடம் முறையிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல் படுத்த சொல்லி வலியுறுத்தி வந்தோம். ஆனால அரசு எங்கள் கோரிக்கையை ஏற்காமல் எங்களை ஏமாற்றும் விதமாக ஒருவர் குழுவை அமைத்தது. ஆனால் அந்த குழு இதுவரை செயல்படாத நிலையிலேயே உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் நவம்பர் 27-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.