Publish Date: Tue, 08 May 2018 (12:23 IST)
Updated Date: Tue, 08 May 2018 (12:26 IST)
பழைய ஓய்வூதிய கொள்கையை பின்பற்ற வேண்டும் , ஊதிய உயர்வு வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று காலை முதல் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலை சென்னை கோட்டையை முற்றுகையிட முயன்ற சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அண்ணா சாலை, சேப்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தஞ்சாவூரில் இருந்து சென்னை வந்திருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியரான தியாகராஜன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென ஆசிரியர் தியாகராஜன் மரணம் அடைந்தார்.
ஆசிரியர் தியாகராஜனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் மரணம் அடைந்ததாகவும் இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.