Publish Date: Sat, 27 Feb 2021 (10:58 IST)
Updated Date: Sat, 27 Feb 2021 (11:19 IST)
தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வு கிடையாது என்றும் அவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்றும் சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்து இருந்தார் என்று வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
2020-21ஆம் கல்வியாண்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தக் கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வித் தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளைப் பரிசீலித்தும், 2020-21ஆம் கல்வியாண்டில் 9,10,11-ம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.