Publish Date: Wed, 03 Jan 2024 (11:52 IST)
Updated Date: Wed, 03 Jan 2024 (11:57 IST)
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ கு.க செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார்.
திமுகவில் தலைமை நிலைய அலுவலக செயலாளராக கு.க.செல்வம் இருந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நெருங்கி பழகியவர். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் 2016-ல் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தார்.
பின்னர் கட்சி பதவி விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த அவர், திடீரென டெல்லி சென்று அப்போதைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மூலம் பாஜக தேசியதலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். அப்போது திமுகவையும் விமர்சித்து பேசி வந்தார்.
பின்னர், திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி உத்தரவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர் 2020-ல் பாஜகவில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். இருப்பினும், பாஜகவில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கு.க செல்வம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.