வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் மழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் முதலாக பல மாவட்டங்களிலும் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து வரும் நிலையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட் உள்ளிட்டவை விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சென்னை எழிலகத்தில் செயல்படும் அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து மாவட்ட கலெக்டர்களோடு காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவுப்படுத்த கூறியுள்ளதுடன், ஆற்றகரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்கு முகாம்களை தயார் நிலையில் வைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றிற்கு வசதி செய்யவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் நீர் தேங்கும் பகுதிகளை கணக்கிட்டு அங்கு கூடுதல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் பல பகுதிகளில் 215 நிவாரண முகாமக்ள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தங்கும் மக்களுக்கு உணவு வழங்க 106 உணவு தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 68 உணவு தயாரிப்பு மையங்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்த உணவு மையங்கள் மூலமாக இதுவரை 1.46 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K