Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வைகையில் இருந்து உபரி நீர் திறப்பு: கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகையில் இருந்து உபரி நீர் திறப்பு: கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
, வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (13:11 IST)
வைகை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா, கேரளாவில் கனமழை பெய்துள்ள நிலையில் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் 136 அடியை தாண்டியது.

இதைத்தொடர்ந்து ரூல்கர்வ் (நீர்தேக்கத்தில் நிலைநிறுத்தக்கூடிய நீர் அளவு மற்றும் செயல்பாடு அட்டவணை) நடைமுறைப்படுத்தப்பட்டு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனிடையே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வராக நதி மற்றும் மூல வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன்காரணமாக வைகை அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது 70 அடிக்கு தண்ணீர் அதிகரித்துள்ளதாக பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வைகை ஆற்றின் ஐந்து மாவட்டங்களைச் சார்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை இரண்டு கட்டங்களாக விடுக்கப்பட்ட நிலையில், இன்று இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வெள்ளை அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

தற்போது அணைக்கு 1,190 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், நீர்மட்டம் நேற்று மாலை 70 அடி வரை உயர்ந்த நிலையில், உபரி நீர் அணையின் 7 மதகுகள் வழியாக இன்று காலை திறக்கப்பட்டது.

எனவே, பொதுமக்கள் யாரும் குளிப்பதற்கோ துணி துவைப்பதற்கோ வைகை ஆற்றின் கரையோரம் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேட்டூரில் 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு! – 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!