Publish Date: Tue, 01 Jul 2025 (10:20 IST)
Updated Date: Tue, 01 Jul 2025 (10:23 IST)
சிவகாசி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது பட்டாசு ஆலை விபத்துகள் நிகழ்ந்து, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே உள்ள சின்னகாமன்பட்டி என்ற பகுதியில் இருக்கும் ஒரு பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பெரும் விபத்து ஏற்பட்டு, ஆலையின் மூன்று அறைகள் தரைமட்டமாகின. இதில், ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், நான்கு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு குவிந்து வருவதால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினரும் காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.