பீகார் மாநிலத்தில் தலைநகர் பாட்னாவிலிருந்து 50 கி.மீ. தொலைவில், ரூ.100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் சாலையில் நடுவில் உள்ள மரத்தை கூட எடுக்காமல் சாலை போட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா-கயா முக்கிய சாலையில் 7.48 கி.மீ. நீளமுள்ள சாலை போடப்பட்ட நிலையில் இந்த சாலையின் நடுவே மரங்கள் கம்பீரமாக நிற்கின்றன. இது பயணிகளுக்கு விபத்துக்களை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. இந்த மரங்கள் ஒரே இரவில் வளர்ந்துவிடவில்லை. அப்படியானால் என்ன நடந்தது?
மாவட்ட நிர்வாகம் ரூ.100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்கத் திட்டத்தை மேற்கொண்டபோது, மரங்களை அகற்ற வனத்துறையிடம் அனுமதி கோரியது. ஆனால், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, 14 ஹெக்டேர் வன நிலத்திற்கு இழப்பீடு கோரியது வனத்துறை. இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தால் இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. அதனால் அவர்கள் ஒரு விசித்திரமான நடவடிக்கையை மேற்கொண்டனர். மரங்களைச் சுற்றி சாலையை அமைத்தனர்.
மரங்கள் நேராக ஒரு வரிசையில் நடப்படவில்லை. ஓட்டுநர் அவற்றை தவிர்ப்பது கடினம். ஒருவர் அவற்றின் வழியாக சுற்றி வளைத்துதான் செல்ல வேண்டும். இது ரூ.100 கோடி செலவில் மரணத்தை அழைப்பது போல் தெரிகிறது.
சாலையின் நடுவில் மரங்கள் இருப்பதால் ஏற்கனவே பல விபத்துக்கள் நடந்துள்ளன என்று அவ்வழியே சென்ற ஒருவர் கூறினார். இருப்பினும், மாவட்ட நிர்வாகம் மரங்களை அகற்ற எந்த உறுதியான நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.
ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு, ஒருவர் இறந்தால் யார் பொறுப்பு? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.