தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கான நியாயமான முறையை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடியை தமிழக எம்பிகள் சந்திக்க உள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்த கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
2026ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு நடைமுறைக்கு வரும்போது, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பின்னடைவுக்கு உள்ளாகக்கூடும். மேலும், மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியாவில் முதல்முறையாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். விரிவான ஆலோசனையின் பின்னர், முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும் தொகுதி மறுசீரமைப்பு மாநிலங்களுடன் கலந்தாலோசித்து, வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும், 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேலும் 25 ஆண்டுகள் நீட்டிக்கப்பட வேண்டும் உள்பட சில முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
தமிழக மக்களின் சார்பில், எதிர்க்கட்சியாக இருந்தும் ஆதரவு அளித்த அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி. மேலும் அடுத்த கட்டமாக, தமிழக எம்பிக்கள் குழு பிரதமரை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்த உள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.