வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒரு குழந்தையின் வலது கை கட்டைவிரல் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் முள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த விமல்ராஜ் மற்றும் நிவேதா தம்பதியருக்கு கடந்த 24ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் கையில் இன்ஃப்யூஷன் மற்றும் மருந்து செலுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த பகுதியில் ஒட்டியிருந்த டேப்பை மாற்றும் பணியில் இருந்த செவிலியர் ஒருவர், தேவையான கவனமின்றி கத்தரிக்கோலால் அதை அகற்ற முயன்றபோது, குழந்தையின் கட்டைவிரலை தவறுதலாக வெட்டியுள்ளார். இதனால் அந்த குழந்தை பரிதாபமாக கதறியது.
இந்த துயரமான சம்பவம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியதுடன், மருத்துவமனை நிர்வாகத்திடம் எதிர்ப்பை உருவாக்கியது. சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குழந்தை சென்னையின் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டது, அங்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
இதனைக்குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் அரசு மருத்துவமனையின் சேவைகள் குறித்த நம்பிக்கையை இந்த சம்பவம் பெரிதும் பாதித்துள்ளது.