Publish Date: Wed, 07 Mar 2018 (16:10 IST)
Updated Date: Wed, 07 Mar 2018 (16:13 IST)
கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்குள் நுழைந்திருப்பது பற்றி தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வருவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டனர்.
அதிலும், வேகமாக செயல்பட்ட கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சி பெயரையும் அறிவித்து, மதுரையில் மாநாட்டையும் நடத்தி முடித்து விட்டார். ஒரு பக்கம் ரஜினிகாந்த், ரசிகர்கள் சந்திப்பு, மாவட்டந்தோறும் நிர்வாகிகளை நியமிப்பது என அரசியல் பணிகளில் மும்முரமாக ஈட்டுபட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவரிடம் ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த இளங்கோவன் “கமல்ஹாசன் அரசியலில் கால் பதித்து விட்டார். மதுரையில் அவர் நடத்திய பொதுக்கூட்டத்தில் பெரும்கூட்டம் கூடியது. அந்த மேடையில் அவர் தெளிவாகவும் பேசினார். ஆனால், அந்த மேடையில் திமுக, காங்கிரஸை கெஜ்ரிவால் விமர்சித்து பேசினார். அதற்கு கமல் இடம் கொடுத்திருக்கக் கூடாது. ஆனால், கமலின் அரசியல் ஆரம்பம் நன்றாகவே இருக்கிறது.
ஆனால், ரஜினிகாந்திடம் அரசியல் தெளிவு இல்லை. ஆன்மீக அரசியல் என மக்களை குழப்புகிறார். அவரை பாஜகதான் பின்னால் இருந்து இயக்குகிறது. எனவே, காவி அரசியல் என வெளிப்படையாக சொல்லி விட்டுப் போகலாம்” என அவர் பதிலளித்தார்.