மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது 15 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி மதுரைக்கு வெள்ளப் பிரச்சனை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழை காலங்களில் செல்லூர் பகுதியை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க ரூ.15 கோடி செலவில் கூடுதல் கான்கீரிட் கால்வாய் அமைக்கும் பணிகள் 3 மாதங்களில் நிறைவு பெற்றது.
வெள்ளப் பெருக்கின்போது, செல்லூர் கண்மாய்க்கு அதிகப்படியான தண்ணீர் உள் வரவு வந்து உபரி நீராக வடிவமைக்கப்பட்ட அளவை விட கூடுதலாக வெளியேற்றப்பட்டது.
இதனால் கடந்த ஆண்டு செல்லூர், கட்டபொம்மன் நகர், பி.பி.குளம் மற்றும் நரிமேடு ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
தற்போது, வலது புற கரையில் அமைந்துள்ள தலை மதகின் மூலம் விநாடிக்கு 1,090 கனஅடி தண்ணீரை வெளியேற்றும் வகையில் புதிதாக 290 மீ நீளத்திற்கு மூடிய கால்வாயாக அமைத்து வைகையாற்றில் சேர்க்கும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் இந்த பகுதியில் வெள்ள நீரால் பிரச்சனை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.