Publish Date: Sun, 30 Aug 2020 (18:31 IST)
Updated Date: Sun, 30 Aug 2020 (18:34 IST)
தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்து: பேருந்துகள் ஓடும், மால்கள் திறக்கலாம்
மத்திய அரசு நேற்று அன்லாக் 4.0 குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சற்றுமுன் தமிழக அரசு அடுத்தகட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு தொடரந்தாலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகள் குறித்து தற்போது பார்ப்பபோம்
தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. ஆனால் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் தேவை. அதேபோல் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களுக்கு செல்லவும் இ-பாஸ் அவசியம்.
தமிழகத்தில் ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள், கிளப்களை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி
தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். மால்கள் திறக்கலாம், ஆனால் மால்களில் உள்ள திரையரங்குகளும் மற்ற திரையரங்குகளும் திறக்க அனுமதி இல்லை.
செப் 7ம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குகிறது. செப்டம்பர் 1 முதல் சென்னையிலும் மற்ற மாவட்டங்களிலும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ஓடும்
ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.
மதம் சார்ந்த கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை தொடரும். வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதி; நிகழ்ச்சிகள் நடத்த தடை நீட்டிப்பு