Publish Date: Sat, 14 Feb 2026 (17:38 IST)
Updated Date: Sat, 14 Feb 2026 (17:40 IST)
2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தனது தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டது. அதேநேரம் தமிழகத்தில் தேர்தல் நடப்பதால் கூட்டணிக்கு அதிமுகவின் தலைமை தாங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார்.
அதேநேரம் 40லிருந்து 50 தொகுதிகள் வரை வாங்க பாஜக திட்டமிட்டிருக்கிறது. ஆனால் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் அதிமுகவில் துவங்கப்படவில்லை என தெரிகிறது.ஒரு பக்கம் சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி துவங்க திட்டமிட்டிருக்கிறார்.
ஏற்கனவே மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம். என்கிற தலைப்புடன் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்தார் பழனிச்சாமி. இந்நிலையில், அடுத்த கட்டமாக வருகிற 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை 6 நாட்கள் மீண்டும் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். இந்த ஆறு நாட்களில் அம்பத்தூர், மாதாவரம், பொன்னேரி, மதுரவாயல், பூந்தமல்லி, வானகரம், தாம்பரம், பல்லாவரம், துரைப்பாக்கம் போன்ற இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொள்வதாக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.