சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து விஜய் பேசியதை சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக, திமுக அரசு குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
அதை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக பிரமுகர் சரத்குமார் “தமிழக வெற்றிக் கழக பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்து விஜய் பேசியது விநோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்தது.
பிரதமருக்கு தமிழகம் என்றால் அலர்ஜி, தமிழக ஜிஎஸ்டி வருவாயை பெற்றுக் கொண்டு தமிழகத்திற்கு நிதியே ஒதுக்குவதில்லை, இருமொழிக் கொள்கையில் உறுதி, தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பேசியிருப்பதுதான் மேலும் வேடிக்கை.
ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசுவதாக எண்ணி, மத்தியில் நடக்கின்ற சிறந்த ஆட்சியை, பாரதத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் பாரத தலைவரை, உலகம் போற்றும் சாதனை மனிதரை, சாதரண மனிதராக எண்ணிக் கொண்டு கேலி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இனி வரும் காலங்களில் அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து உண்மையான கருத்துகளைப் பேசி ஆக்கப்பூர்வமான நாகரிகமான அரசியலில் விஜய் ஈடுபடுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K