திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு நல்லது நடக்கும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பி ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு கீழே 500 அடி பள்ளத்தில் மேகதாது அணை கட்ட திட்டமிட்டு பெங்களூருவுக்கு குடிநீர் என்ற பெயரில் தண்ணீரை அங்கே கொண்டு சென்றால் பாசனத்திற்கு தண்ணீர் குறைந்து விடும் என கர்நாடகாவின் காவிரி பாசன விவசாயிகள் மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
விவசாயிகள் ஆதரவு தெரிவிக்காத நிலையில் அங்கு காங்கிரசுக்கும் பா.ஜ.,வுக்குமான போட்டியில் தங்களது எதிர்ப்பை காட்ட நினைத்த துணைமுதல்வர் சிவக்குமார், மேகதாது அணை கட்டுவதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மறுப்பு தெரிவிக்கவில்லை, பேசவும் இல்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவில்லாமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. கர்நாடகாவில் நடந்த கூட்டத்தில் தமிழக, கர்நாடக விவசாயிகள் கலந்து கொண்டு மேகதாது அணை கட்டினால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கிய பின் தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என நாங்கள் வைத்த கோரிக்கையை கர்நாடக விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர்.
மேகதாது அணையை பொருத்தவரை 'இது கர்நாடக அரசின் அரசியல் நாடகம்' என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்க வேண்டும், எப்போதுமே பதில் சொல்வதில்லை. அ.திமு.க., ஆட்சிக் காலத்தில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிய பின்பே, அணையிலிருந்து பாதுகாப்பிற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. எனவே விவசாயிகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்று பிஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.