Publish Date: Wed, 02 Feb 2022 (11:03 IST)
Updated Date: Wed, 02 Feb 2022 (11:44 IST)
விழுப்புரத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உரையாற்றினார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக காணொலி மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என செய்திகள் வெளியானது. இதனிடையே விழுப்புரத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உரையாற்றினார்.
அப்போது அவர் திமுக வேட்பாளர்கள் எப்படி பிரச்சாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். அவர் கூறியதாவது, வேட்பாளர்கள் பொது மக்களின் கோரிக்கையை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வணக்கம் போடுவதை விடுத்து, வீட்டில் அமர்ந்து அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். மேலும், அவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரிக்கவும் தயங்கக் கூடாது.
பெண் வேட்பார்கள் கணவர் பார்த்துக்கொள்வார் என இல்லாமல் நீங்களும் வாக்கு சேகரிக்க வேண்டும். கூட்டணி கட்சியினரோடு இணக்கமாக செயல்பட வேண்டும். மக்களுக்கு மறதி அதிகம் அதனால் திமுக அரசின் சாதனையை வீடு வீடாக சென்று எடுத்து சொல்ல வேண்டும் எதிர்த்து போட்டியிட்டவர்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என பிரச்சாரத்திற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளார்.