Publish Date: Thu, 18 Nov 2021 (17:36 IST)
Updated Date: Thu, 18 Nov 2021 (17:52 IST)
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என தகவல்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்பதை கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் பார்த்தோம். இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சென்னையில் இருந்து 260 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது.
இதன் காரணமாக வட தமிழகத்தை ஒட்டிய கடல் பரப்பில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாமல், நாளை காலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும்.
இதன் காரணமாக, இன்று மாலை முதல் மழை அதிகரிக்கும். இது புயலாக மாறும் வாய்ப்பில்லை. தாழ்வு மண்டலம் கரையை கடந்த பிறகு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பிற்பகலுக்குப் பிறகு மழை குறையத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.