கோவையில் கூகிள் பேவில் பணம் அனுப்புவதாக கூறி பலரிடம் பணத்தை திருடிய தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவையில் சங்கனூர் - நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சிக் கடை நடத்தி வருபவர் சக்திவேல். கடந்த ஜூன் 15ம் தேதி இவரது கடைக்கு மதியத்திற்கு மேல் ஒரு தம்பதி வந்துள்ளனர். அருகில் உள்ள மருத்துவமனைக்கு வந்ததாகவும், ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்றபோது கார்டு வேலை செய்யவில்லை என்றும் சொல்லியுள்ளனர். மருத்துவமனைக்கு அவசரமாக பணம் தர வேண்டியுள்ளதால், சக்திவேலிடம் உள்ள பணத்தை கொடுத்தால் ஜிபேவில் அதை அனுப்பி விடுவதாகவும் கூறியுள்ளனர்.
அவர்களுக்காக மனமிறங்கிய சக்திவேல் அவர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கியுள்ளார். அவர்களும் ரூ.2 ஆயிரமாக இரண்டு முறை அனுப்பியதாக ஃபோனை காட்டியுள்ளார்கள். அதை நம்பிய சக்திவேல் சரி என விட்டுவிட்டார். ஆனால் அவருக்கு நீண்ட நேரமாகியும் பணம் க்ரெடிட் ஆனதாக குறுஞ்செய்தி வரவில்லை. அக்கவுண்டை செக் செய்தபோது அவர்கள் பணமே அனுப்பவில்லை என தெரிய வந்த சக்திவேல் அதிர்ச்சிக்குள்ளானார்.
உடனடியாக இதுகுறித்து அவர் போலீஸில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் அவர்களது பைக் நம்பரை எடுத்து தேடியதில் அவர்கள் சுகுணாபுரத்தை சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் அவரது மனைவி சர்மிளா பானு என தெரிய வந்துள்ளது. அவர்களை பிடித்து விசாரித்ததில் இதுபோல பணத்தை வாங்கிக் கொண்டு ஜிபே செய்வதாக 100க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
Edit by Prasanth.K