இன்று மாலை தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் காரணங்களால், தமிழ்நாடு, புதுவை பகுதிகளில் இன்று மாலை இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் சென்னையில் 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.