Publish Date: Wed, 29 Jul 2020 (13:09 IST)
Updated Date: Wed, 29 Jul 2020 (14:10 IST)
கோவையில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசியதாக கைது செய்யப்பட்ட அருண்கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை சுந்தராபுரம் பகுதியில் பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ள பெரியார் சிலை மீது கடந்த 17ஆம் தேதி காவிச்சாயம் ஊற்றப்பட்டது. இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் கலகம் ஏற்படுத்துதல், விரோத உணர்ச்சியை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தேடி வந்த நிலையில், போத்தனூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் (21) போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அருண் கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆணையை கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் பிறப்பித்தார். ஆணை தொடர்பான ஆவணம் கோவை மத்திய சிறையில் அடுக்கப்பட்டுள்ள அருண் கிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.