Publish Date: Mon, 17 Jul 2023 (11:22 IST)
Updated Date: Mon, 17 Jul 2023 (11:24 IST)
“அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என பெங்களூரு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலலிதா ஆட்சி காலத்தில் புனையப்பட்ட பொய் வழக்கில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமலாக்கத்துறையின் சோதனையை சட்டரீதியாக அமைச்சர் பொன்முடி சந்திப்பார்.
வடமாநிலங்களில் பயன்படுத்திய உத்தியை பாஜக தற்போது தமிழ்நாட்டில் பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்காக பாஜக செய்யும் தந்திரம்தான் இந்த அமலாக்கத்துறை சோதனை” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னதாக இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.