சமீபத்தில் சட்டமன்றத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் ஆதங்கத்துடன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க ஆரம்பித்ததால், அமைச்சரவையில் சலசலப்புகள் ஏற்பட்டன.
இந்த நிலையில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில அறிவுரைகளை கூறியுள்ளார். 'தமிழ் வேள்' பி.டி.ஆர். ராஜன் வாழ்வே வரலாறு நூல் வெளியீட்டு விழாவில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
"அமைச்சர் பிடிஆர் பல்வேறு அறிவார்ந்த, வலிமையான வாதங்களை வைக்கக்கூடியவர். இந்த சொல்லாற்றல் அவருக்கு பலமானதாக இருக்க வேண்டுமே தவிர, பலவீனமாக ஆகிவிடக்கூடாது. இதை ஏன் சொல்கிறேன் என்று அவருக்கே தெரியும்.
நமது எதிரிகள் வெறும் வாயை மெல்லக்கூடிய அளவுக்கு ஆற்றல் பெற்றவர்கள். அதற்கு அவலாக உங்கள் சொல் ஆகிவிடக்கூடாது. என் சொல்லை தட்டாத பிடிஆர், என்னுடைய அறிவுரையின் அர்த்தத்தையும் ஆழத்தையும் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதனை அடுத்து, பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் திமுக தலைமையுடன் சமரசம் ஆகி, தனது பணிகளை வழக்கம்போல் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.