தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் தலைச்சுற்றலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மீண்டும் திமுக ஆட்சி அமைவதற்காக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். நேற்று முதல்வருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்ட நிலையில் உடனடியாக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த செய்தி திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், துரைமுருகன் உள்ளிட்ட பலரும் அப்பல்லோ மருத்துவமனை விரைந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும், அவருக்கு வேறு சில பரிசோதனைகள் செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மேலதிக பரிசோதனைகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தேனாம்பேட்டை அப்பல்லோ அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு பரிசோதனைகளை முடித்துக் கொண்டு அவர் க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வார் என்றும் அங்கு 3 நாட்கள் ஓய்வில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
Edit by Prasanth.K