Publish Date: Fri, 19 Nov 2021 (13:30 IST)
Updated Date: Fri, 19 Nov 2021 (16:59 IST)
பெண் மருத்துவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரத்தில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா வீரியமாக பரவி வந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் அவர்கள் இருந்ததால் அவர்களை பாதுகாப்பாக தனிமைப்படுத்தி வைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் அங்கு தங்கியிருந்த பயிற்சி பெண் மருத்துவரின் அறைக்கு சென்று டாக்டர் வெற்றிச்செல்வன் என்பவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதேபோல டாக்டர் மோகன்ராஜ் என்பவரும் பெண் மருத்துவர் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பெண் மருத்துவர்கள் டீனிடம் அளித்த புகாரின் பேரில் இந்த புகார் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில் குற்றம் நிரூபணம் ஆன நிலையில் சம்பந்தப்பட்ட இரு மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.