Publish Date: Fri, 06 Mar 2026 (20:07 IST)
Updated Date: Fri, 06 Mar 2026 (20:15 IST)
2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை முதலில் கூட்டணியை அறிவித்தது அதிமுகதான். இன்னும் சொல்லப்போனால் அதை அதிமுக அறிவிக்கவில்லை. அமித்ஷா அறிவித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.. அதிமுக கூட்டணியில் பாஜக இணைகிறது என சொல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்திருக்கிறது என செய்தியாளரிடம் பேசினார் அமித்ஷா.. அருகில் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது இந்த கூட்டணிக்கு அமித்ஷா தலைவரா? இல்லை எடப்பாடி பழனிச்சாமி தலைவரா என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தது..
இதை புரிந்து கொண்ட பழனிச்சாமி அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்றார். மேலும் அப்போது பேசிய அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று என்கிற வார்த்தையை குறிப்பிட்டார். 2 நாட்கள் கழித்து செய்தியாளர்களிடம் அதை மறுத்தார் பழனிச்சாமி. அதிமுக தலைமையில்தான் ஆட்சி.. கூட்டணி ஆட்சியெல்லாம் ஒன்றுமில்லை என விளக்கம் கொடுத்தார். தமிழக பாஜக இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனர்.
நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், வானதி சீனிவாசன், நிர்மலா சீதாராமான் ஆகியோர் ஊடகங்களில் பேசியபோது அதிமுக கூட்டணி எங்கும் சொல்லவில்லை.. தேசிய ஜனநாயக கூட்டணி என்றுதான் சொல்கிறார்கள். மேலும், தொகுதி பங்கீடு பற்றி பாஜகவிடம்தான் நாங்கள் பேசுவோம். பழனிச்சாமியிடம் பேசமாட்டோம் என்கிறார் டிடிவி தினகரன்.
அதேபோல், எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் என அவர்கள் யாரும் என்க்கும் சொல்லவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தபோதும் சரி, மதுரையில் நடந்த போதும் சரி, அமித்ஷாவோ, மோடியோ முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என சொல்லவே இல்லை. அதோடு 40 தொகுதிகள் வரை கேட்கிறது பாஜக. ஒருவேளை அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிச்சாமிதான் முதலமைச்சரா இல்லை பாஜக வேறொருவரை முதல்வராக நியமிக்குமா என்பது தெரியவில்லை..