Publish Date: Wed, 07 Feb 2018 (08:33 IST)
Updated Date: Wed, 07 Feb 2018 (08:37 IST)
சென்னையில் பிறந்த நாள் விழாவிற்காக ஒரே இடத்தில் கூடிய 40 க்கும் மேற்பட்ட ரௌடிகளை, போலீஸார் துப்பாக்கி முனையில் சுற்றி வழைத்து கைது செய்தனர்.
அஜித் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் தாதாக்களை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்வார்கள். அதேபோல் சென்னையில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
சென்னையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னை மாங்காடு அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரௌடிகள் ஒன்று கூடியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சற்றும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்காடு போலீஸார் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 40-க்கு மேற்பட்ட ரௌடிகளை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய சில ரௌடிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீஸாரின் இந்த வீர செயலை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.