Publish Date: Tue, 06 Feb 2018 (12:56 IST)
Updated Date: Tue, 06 Feb 2018 (13:41 IST)
சென்னை உயர்நீதிமன்றத்தின் பதில் மனு தாக்கல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மதுரை ஆதினத்தின் 293வது மடாதிபதி பதிவியை நித்யானந்தா திரும்பப் பெற்றார்.
ஜெகதலப் பிரதாபன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், மதுரை ஆதீனத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்த போது 293-வது ஆதீனமாக நித்யானந்தா தன்னை தானே அறிவித்து கொண்டது சட்டத்துக்கு விரோதமான செயல் என அதில் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கில் நித்தியானந்தாவை பதில் மனு தாக்கல் செய்யும் படி உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவித்தது. ஆனால் நித்யானந்தா தரப்பு பதில் மனு தாக்கல் செய்யாமல் வழக்கை இழுத்தடித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்ன உயரநீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நித்யானந்தா தரப்பை, பிப்ரவரி 2-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிடில் கைது உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்தார்.
இதனையடுத்து நித்யானந்தா தற்பொழுது மதுரை ஆதினத்தின், 293வது மடாதிபதி பதிவியை திரும்பப் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.