Publish Date: Wed, 10 Oct 2018 (07:22 IST)
Updated Date: Wed, 10 Oct 2018 (07:28 IST)
பெரும்பாலான தனியார் அலுவலகங்களில் தானியங்கி வருகைப்பதிவு வசதி இருக்கும் நிலையில் தற்போது படிப்படியாக அரசு அலுவலகங்களிலும் தானியங்கி வருகைப்பதிவு வசதி கொண்டு வரப்படுகின்றது. இதனால் ஊழியர்கள் இனி வருகைப்பதிவில் ஏமாற்ற முடியாது.
இந்த நிலையில் அலுவலகங்களை அடுத்து தமிழகத்திலேயே முதல் முறையாக மாணவ - மாணவிகளுக்கான தானியங்கி வருகைப் பதிவு வசதி கொண்டு வரப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணவர்களின் வருகை குறித்து குறுஞ்செய்தி மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கும் வசதியும் வரவுள்ளது. முதல்கட்டமாக போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த குறுஞ்செய்தி வ்சதியின் மூலம் தங்களுடைய குழந்தைகள் பத்திரமாக பள்ளிக்குச் சென்றதை பெற்றோர்காள் உறுதி செய்து கொள்ளலாம். அதேபோல் பள்ளி முடிந்தவுடன் பள்ளியில் இருந்து புறப்பட்டு விட்டார்களா? என்ற பதற்றமும் இனி இல்லை. பள்ளி விடும் நேரமும் குறுஞ்செய்தியில் வந்துவிடும்.
பள்ளி மாணவ மாணவிகளின் அடையாள அட்டையில் சிப் பொருத்தப்பட்டு, அவர்களின் பெற்றோர் எண்கள் தொடர்புபடுத்தப்பட்டு இருக்கும். பள்ளி நுழைவு வாயிலில் ரேடியோ அலைகள் பாய்ந்து கொண்டிருக்கும் கருவிகள் வைக்கப்பட்டிருப்பதால் இதன் வழியாக அடையாள அட்டை வைத்திருக்கும் மாணவர்கள் அந்த சாதனத்தை கடந்து செல்லும்போது அவர்களுடைய வருகையும் பள்ளியில் இருந்து வெளியேறும் போது தானாகவே பதிவு செய்யப்பட்டு விடும். இதனையடுத்து உடனடியாக பெற்றோர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும்.
இந்த வசதியை முதல் முறையாக போரூரில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்த புதிய வசதியால் நிம்மதி ஏற்பட்டிருப்பதாக பெற்றோர்கள் கருத்து கூறி வருகின்றனார்.