Publish Date: Tue, 09 Oct 2018 (18:02 IST)
Updated Date: Tue, 09 Oct 2018 (18:10 IST)
அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ், இணையதள மற்றும் கணினிமயப் படுத்துதல் போன்ற திட்டங்கள் இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப் படுத்தபடவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
சமீப காலமாக தமிழக பள்ளிக்கல்வித்துறை பல அதிரடி மாற்றங்களை செய்து கொண்டிருக்கின்றது. 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுதேர்வு என்ற அறிவிப்பு உள்பட பல அறிவிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றன. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் மாநில அளவில் முதல் மதிப்பெண் போன்ற தரம் பிரிக்கும் முறைகளையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை செய்துள்ளது.
இந்நிலையில் தற்போது நவம்பர் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையைத் திறந்து வைத்து பார்வையிட்ட அவர் அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ’நவம்பர் மாத இறுதிக்குள் 3000 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்பறைகள் அனைத்தும் கணினிமயப் படுத்துதல் மற்றும் இணையதள் வசதிகள் அறிமுகப் படுத்தப்படும். ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் திட்டம் குறித்தும் யோசித்து வருகிறோம்’ என அவர் கூறினார்.