Publish Date: Sat, 10 Aug 2019 (12:04 IST)
Updated Date: Sat, 10 Aug 2019 (12:09 IST)
அத்தி வரதரை தரிசிக்க இன்று காலை 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டிருந்ததால் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதர் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். முதல் 31 ஒரு நாட்கள் சயனகோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்த அத்திவரதர், கடந்த ஆகஸ்து 1 ஆம் தேதியிலிருந்து நின்ற கோலத்தில் காட்சி தந்து வருகிறார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதர், ஆகஸ்து 17 ஆம் தேதி மறுபடியும் குளத்திற்குள் செல்கிறார்.
அத்திவரதரை தரிசிக்க, இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அனுதினமும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று காலை மற்ற நாட்களை விட பக்தர்கள் கூட்டம் அதிக அளவு இருந்தது.
அதாவது நேற்று அத்திவரதரை காண முடியாத பக்தர்கள், இரவு அங்கேயே தங்கிய பக்தர்களோடு சேர்ந்து இன்று காலை அத்திவரதரை காண வந்த பக்தர்களும் வரிசையில் நின்றதால், கிட்டதட்ட 4 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்து கிடந்தனர். மேலும் 5 லட்சத்துக்கும் மேல் பக்தர்கள் திரண்டு வந்த அத்திவரதரை காண வரிசையில் நின்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரையில் 80 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து இருக்கிறார்கள் எனவும், அத்திவரதர் குளத்திற்குள் செல்ல இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.