கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவுக்கு நிர்வாகிகள் இல்லை என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வாக்குவாதம் செய்ததாகவும், அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அவரை கடிந்து கொண்டதாகவும் வெளியாகி இருக்கும் செய்தி, அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக மீது அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் இன்னும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், அதிமுகவில் உள்ள முன்னணி தலைவர்கள் மத்தியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவுக்கு நிர்வாகிகளே இல்லை என விஜயபாஸ்கர் கொடுத்த விளக்கத்தால், எடப்பாடி பழனிசாமி ஆத்திரமடைந்ததாகவும், அவர் விஜயபாஸ்கரை கடுமையாக கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் இருவரையும் சமாதானம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடும் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சில அதிரடி முடிவுகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.