Publish Date: Wed, 03 Apr 2019 (07:18 IST)
Updated Date: Wed, 03 Apr 2019 (07:20 IST)
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜிக்கு கரூர் தொகுதி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது
கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக அவர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஜோதிமணியும், செந்தில் பாலாஜியும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவலர்களுடன் தகராறு செய்டதோடு, திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டதாக, தாந்தோன்றிமலை காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆர்.சுப்ரமணியம், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதனால் செந்தில் பாலாஜி வழக்கம்போல் தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார்.
கரூர் மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக தம்பிதுரை போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது