காவலர் குடியிருப்பிலேயே கொலை நடந்துள்ள நிலையில், காவல்துறையை முதல்வர் முக ஸ்டாலின் வைத்திருப்பது தமிழகத்தின் சாபக்கேடு என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் கூறியதாவது:
திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது.
பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழகம் தரம் தாழ்ந்திருக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு
முக ஸ்டாலின் , கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு.