Publish Date: Tue, 15 Sep 2020 (09:09 IST)
Updated Date: Tue, 15 Sep 2020 (09:36 IST)
திராவிட இயக்கத்தலைவர்களில் ஒருவரும் திமுகவை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 110 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
திமுக என்ற கட்சியை உருவாக்கி அது இன்று 70 ஆண்டுகள் தாண்டியும் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருக்க காரணகர்த்தாவாக அமைந்தவர் அண்ணாதுரை. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் மாணவர்களை ஒன்றுதிரட்டி இந்தியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி ஆட்சிக்கு வந்தது திமுக. வந்த ஓரே ஆண்டில் சுயமரியாதை திருமண சட்டம், தமிழகத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது எனப் பல அரிய திட்டங்களை செயல்படுத்திக் காட்டியவர்.
இந்நிலையில் யார் திராவிடர் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அண்ணா சொன்ன கருத்து ‘பிறப்பால் ஆரியத்தைச் சேர்ந்த ஒருவரும் உணர்வால் திராவிடர் ஆகலாம், ஆரியம் பிறப்பில் இல்லை. அது கருத்தில் உள்ளது. திராவிடராய் பிறந்து நெஞ்சில் சாதியத்தை சுமப்போரும் ஆரியரே’ எனக் கூறியுள்ளார். ஆரிய திராவிட சர்ச்சைகள் மற்றும் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் இந்தி திணிப்பு செய்யப்பட்டு வரும் நாட்களில் அண்ணாவின் தேவை மீண்டும் உருவாகியுள்ளது. அண்ணாவின் கருத்துகளைப் பரப்பி அவரின் அரிய பணிக்கு நியாயம் செய்வோம்.