Publish Date: Tue, 24 Nov 2020 (15:54 IST)
Updated Date: Tue, 24 Nov 2020 (16:21 IST)
நிவர் புயல் அதி தீவிரப் புயலாக மாறியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அருகே வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் மாமல்லப்புரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் வலுவடைந்துள்ளதால் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது 120 முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், சுற்றுவட்டார மாவட்டங்களில் 100 முதல் 120 கி.மீ வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இப்போது அனைத்து மாவட்டங்களிலும் அரசின் இலவச ஆம்புலன்ஸ் சேவையான 108 தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.