Publish Date: Fri, 01 Mar 2024 (19:39 IST)
Updated Date: Fri, 01 Mar 2024 (19:45 IST)
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, சந்தித்த பிறகு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, , எஸ்.பி.வேலுமணி,கே.பி. அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்டோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் சந்தித்து பேசினர்.
அதற்கு முன்னதாக, வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் தூவி அதிமுக நிர்வாகிகள் மரியாதை செய்தனர்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினோம். கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பிலும் குழு அமைக்கப்படும். குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்திய பின் கூட்டணி பற்றி தெரியவரும் என்று கூறினார்.
மேலும், தேமுதிகவுடன் தொடர்ந்து கூட்டணியா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நேரில் வந்து பேசியுள்ளோம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, விஜயகாந்துடன் கூட்டணி வைத்து ஜெயித்தபோது, விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானது குறிப்பிடத்தக்கது.