அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லி சென்றிருக்கிறார். அவர் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்காகவே டெல்லி சென்றுள்ளார் என கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகி விட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில், செங்கோட்டையன் திடீரென டெல்லி சென்றிருப்பது புதிய அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருப்பதால், ஒரே நபர் இரண்டு பதவிகளை வகிக்கக்கூடாது என்பதற்காக பொதுச்செயலாளர் பதவியை தனக்காக பெற்றுத் தர வேண்டும் என செங்கோட்டையன் பாஜக உயர்மட்ட தலைவர்களிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்து பாஜக உயர்மட்டத்தில் சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டையன் தலைமையில் அதிமுக உருவானால், ஓபிஎஸ், சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் ஆகியோருக்கு கட்சியில் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும், ஒருங்கிணைந்த அதிமுக உருவாக பாஜக திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.