எந்த நடிகர் மாநாடு நடத்தினாலும், கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கமல்ஹாசன் கட்சி தொடங்கினார், ஆனால் தற்போது காணாமல் போய்விட்டார். விஷால் கூட கட்சி தொடங்குவதாக தெரிவித்தார். எத்தனை நடிகர்கள் கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க.விற்கு பாதிப்பு இல்லை. நடிகர்களுக்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது?" என்று கேள்வி எழுப்பினார்.
சினிமாவில் நூறு பேரை அடிக்கும் விஜய், நேரில் அடிக்க முடியுமா என கேள்வி எழுப்பிய அவர், “சினிமாவில் துப்பாக்கியை வைத்து சுடுகிறார், சாகசம் செய்கிறார். ஆனால், நடைமுறையில் இதெல்லாம் நடக்குமா? ரசிகர் கூட்டம் என்பது வேறு. அவர் மக்களுக்கு என்ன சேவை செய்திருக்கிறார்? அவரது வரலாறு என்ன?" என்றும் கேள்வி எழுப்பினார். எம்.ஜி.ஆருடன் நடிகர் விஜய்யை ஒப்பிடுவது தவறு என்றும் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
அமலாக்கத்துறை சோதனை குறித்துப் பேசிய செல்லூர் ராஜு, "அமலாக்கத்துறை சோதனையை மறைக்க முதலமைச்சர் எங்கள் மீது குறை சொல்வார். அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடப்பது வருந்தக்கூடியது. மடியில் கனம் இல்லையென்றால் அமலாக்கத்துறை சோதனைக்கு ஏன் பயப்பட வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.