Publish Date: Thu, 02 Nov 2017 (11:18 IST)
Updated Date: Thu, 02 Nov 2017 (11:22 IST)
ஒவ்வொரு முறை மழை வரும் போது மக்கள் மரணமடைகிறார்கள் எனவும், அரசு தனது தவறை திருத்திக்கொள்ள மறுத்து வருகிறது எனவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமப்படுகின்றனர். மின்சாரம் தாக்கில் இரண்டு சிறுமிகள் பலியாகிவிட்டனர்.
இந்நிலையில், நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஓவ்வொரு முறையும் கனமழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றம் ஏற்படும் போது பொதுமக்கள் மரணமடைவதை சகித்துக்கொள்ள முடியவில்லை.
ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் மரணமடைவதை நாம் பார்க்கிறோம். அதேபோல், மழைக்காலங்களில் அப்பாவி பொதுமக்கள் மின்சாரம் தாக்கி பலியாகின்றனர்.
எத்தனை நாட்கள் இதே நிலை நீடிக்கும்? நமது தவறை திருத்திக்கொள்ளும் பொறுப்பு நமக்கு உண்டா இல்லையா? அதே தவறு மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வது நம் கடமை அல்லவா?
இதை தடுக்கும் திறமை நமக்கு இல்லை என கூற வருகிறோமா? நாம் எதை தெரிவிக்க விரும்புகிறோம்? இப்படித்தான் கடந்த காலங்களில் பலமுறை நடந்திருக்கிறது. ஆனாலும், நாம் பாடம் எதுவும் கற்கவில்லை. மழை, வெள்ளம், புயல் ஆகியவற்றை சந்திக்கும் திறன் இன்னும் சென்னைக்கு வரவில்லை எனத் தோன்றுகிறது. அதற்கான உபகரணங்களும் சென்னையில் இல்லை என நாம் கூறுகிறோமோ தெரியவில்லை.
அவர்களின் தவறுகளை புரிய வைக்க எத்தனை மனிதர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை.
இது தவறு அல்ல.. குற்றம்...” என விஷால் கோபமாக குறிப்பிட்டுள்ளார். நேரிடையாக கூறா விட்டாலும், அரசின் மீதுதான் விஷால் தன் கோபத்தை காட்டியுள்ளார் எனத் தெரிகிறது.