Publish Date: Thu, 02 Nov 2017 (10:18 IST)
Updated Date: Thu, 02 Nov 2017 (10:20 IST)
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக மழை, வெள்ளம் வருமுன் காக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை தண்ணீர் நீர்நிலைகளுக்கு செல்ல வழிவிடாவிட்டால் சென்னை மூழ்க தயாராகிவிடும் என்று அவர் மீண்டும் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள டுவிட்டில் 'இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல் பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன' என்று கூறியுள்ளார்
மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், ' சென்னையின் தென்மேற்கு, வடமேற்கு பகுதியில் உள்ள சேலையூர் ஏரி,கூடுவாஞ்சேரி, நந்திவரம், முடிச்சூர் ஏரிகள் நிரம்பி வழிய அதிக நேரமாகாது என்று கூறிய கமல், நீர்நிலை ஆர்வலர்களுக்கோ, மக்களுக்கோ இந்த ஏரிகளின் கொள்ளளவு தெரியாது என்றும், நீர்வரத்து போதைகளும், நீர் வெளியேறும் பாதைகளும் தெரியாது என்றும் தெரியாது என்பதை விட நில அபகரிப்புக்கு வசதியாக தெரியாமல் வைக்கப்பட்டிருக்கின்றது என்பதே கசப்பான உண்மை என்றும் கூறியுள்ளார்
நன்மங்கலத்தில் இருந்து மற்றொரு ஏரிக்கு நீர்வரும் பாதையை மறித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டே உத்தரவிட்டும் இன்னும் அந்த உத்தரவு மீறப்பட்டே வருவதாகவும் கமல் குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் வாழும் மக்கள் குரலெழுப்ப வேண்டும் என்றும் ஊடகங்களும் அந்த பகுதி மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்' என்று கமல் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.