Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு – சிறப்பு முகாம் நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு.!

highcourt

Senthil Velan

, புதன், 21 ஆகஸ்ட் 2024 (15:44 IST)
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்க 4 வாரங்களில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலை பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.  இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,  கல்வராயன் மலை பகுதியில் சாலை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

கல்வராயன் மலைப்பகுதியில் ஆம்புலன்ஸ் செல்ல ஏதுவாக சாலை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும்  ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
மலைவாழ் மக்கள் மீது வனத்துறை அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதை சகித்து கொள்ள முடியாது என குறிப்பிட்டனர். தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இப்பணிகளை மேற்கொள்ள அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 
 
மேலும், மலைவாழ் மக்கள் மீது எந்த அதிகார துஷ்பிரயோகமும் செய்யக் கூடாது என வனத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேம்பாட்டு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், சாலைகள், பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் நியமனம் போன்ற பணிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.


மேலும் மலைப்பகுதி மக்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அட்டைகளை வழங்க நான்கு வாரங்களில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் எனவும் ஆணையிட்டனர். கல்வராயன் மலை பகுதி மக்களுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிட வசதி ஏற்படுத்துவது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காணாமல் போன கத்தரிக்கோல்! நிறுத்தப்பட்ட 32 விமானங்கள்! - ஜப்பானில் பரபரப்பு!