Publish Date: Mon, 05 Aug 2019 (18:28 IST)
Updated Date: Mon, 05 Aug 2019 (18:34 IST)
நெல்லையில் தண்டவாளத்தில் படுத்து டெய்லர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை குறுக்குத்துறை ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு வாலிபர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் வாலிபரின் உடலை பார்வையிட்டனர்.
பின்பு விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர், தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது. மேலும் அவருக்கு வயது 25 எனவும் தெரியவந்தது. போலீஸார் வாலிபரின் உடல் அருகே, கிடந்த பையை சோதனை செய்த போது, அதில் உள்ள ஒரு தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது வாலிபரை பற்றிய தகவல் தெரியவந்தது.
தற்கொலை செய்த அந்த வாலிபர் சென்னை மாங்காடு அருகே ரகுநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் பிரபு என்றும் தெரியவந்தது. அவர் தனது தந்தையுடன் கேரளாவில் தங்கி டெய்லர் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பிரபு சென்னையில் உள்ள வீட்டுக்கு சென்று வருவதாக தனது தந்தியிடம் கூறிவிட்டு, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சென்னை செல்லாமல் நெல்லையில் இறங்கியுள்ளார். பின்பு ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். அதன் பின்பு நடந்தபடியே குறுக்குத்துறை வந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக, ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. பிரபு ஏன் தற்கொலை செய்தார்? என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.