Publish Date: Sat, 22 Sep 2018 (11:19 IST)
Updated Date: Sat, 22 Sep 2018 (11:27 IST)
கருணாஸ் ஜாதி வெறியை தூண்டும் விதமாக பேசிய பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் அதேபோல் ஜாதிப் பெருமையை பேசியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் கோபத்தில் ஆக்ரோஷமாக பேசினார்.
தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
கொலை செய்தாலும் என்னிடம் சொல்லி விட்டு செய்யுங்கள். காலையில் பல் துலக்குவதற்குள் கொலையை செய்து விடுவோம். எந்த ஜாதிக்காரனும் மூன்று முறை முதல்வர் ஆகவில்லை. எங்கள் தேவர் இனம்தான் மூன்று முறை முதல்வர் பதவியை வகித்தது என தனது ஜாதியை முன்னிறுத்தி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து கருணாஸின் மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவதூறாக பேசுவது, மிரட்டுவது, கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, தேவன், தேவன்தான் என்றும், தன்மீது ஜாதிச் சாயம் பூசப்படுவதை பெருமையாக நினைப்பதாகவும் தெரிவித்தார். சினிமாத் துறையில் எனக்கு கிடைத்த செல்வாக்கிற்கு என் ஜாதியே காரணம் என பேசினார்.
அமைதியாக இருக்கும் தமிழகத்தில் இப்படி சிலர் கீழ்த்தரமாக ஜாதி பெருமையை பேசி கலவரத்தை உண்டாக்க நினைக்கின்றனர். இது தமிழகத்திற்கே மிகப்பெரிய ஆபத்து. ஆகவே அரசாங்கம் இதுபோன்றோரை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்கள் பலரின் கருத்தாக உள்ளது.