Publish Date: Thu, 11 Jul 2024 (10:54 IST)
Updated Date: Thu, 11 Jul 2024 (10:56 IST)
தனியார் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆகஸ்ட் 4ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2023-2024 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 2199 தனியார் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளிகளும், பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 1750 தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளும் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், தனியார் பள்ளிகளை சார்ந்த 78 மாணவ/மாணவியர்கள் சர்வதேச அளவிலும், 255 மாணவ/ மாணவியர் தேசிய அளவிலும், 1579 மாணவ/ மாணவியர் மாநில அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்.
மேற்கண்டவாறு 100% தேர்ச்சி பெற்ற பள்ளி நிர்வாகிகள், பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டி ஊக்குவிக்கவும், சர்வதேச/ தேசிய/ மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற மாணவ/ மாணவியரை மென்மேலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு அரசு சார்பில் முதன்முறையாக 04.08.2024 அன்று சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையிலும் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும் சர்வதேச/ தேசிய/ மாநில அளவில் பதக்கங்களை வென்ற மாணவ/ மாணவியர்களுக்கும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.