Publish Date: Tue, 24 Sep 2024 (13:25 IST)
Updated Date: Tue, 24 Sep 2024 (13:26 IST)
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி நடைபெற்ற நிலையில், இந்த 10 ஆண்டுகளில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம்.
இவர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான திட்டத்தில் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்த ஆதாரங்களை அறப்போர் இயக்கம் அளித்திருந்தது. இதையடுத்து, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வைத்திலிங்கம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வைத்திலிங்கம் மற்றும் அவரது இரண்டு மகன்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வைத்திலிங்கம் வருமானத்துக்கு அதிகமாக 33 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.