Publish Date: Thu, 11 Dec 2025 (10:21 IST)
Updated Date: Thu, 11 Dec 2025 (10:26 IST)
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்த பணி(SIR) இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் வசிக்கும் மக்களிடம் கணக்கீட்டு படிவங்கள் கொடுக்கப்பட்டு அவை நிரப்பப்பட்டிருக்கிறது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 11ம் தேதி முடிவடைகிறது..
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியின் படி கொடுக்கப்பட்ட 6.40 கோடி படிவங்களில் 99.5 சதவீதம் பதிவேற்றம் நிறைவடைந்து விட்டது. தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் கொடுக்கப்பட்டு அதில் முகவரி மாற்றம் மற்றும் பிற விவரங்களின் அடிப்படையில் 6.38 கோடி படிவங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள படிவங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு சரிபார்க்கப்படும் எனத்தெரிகிறது. அதற்கான பணியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், SIR எதிரொலியாக தமிழ்நாட்டில் இருந்து 70 லட்சம் பேர் நீக்கப்படலாம் என தெரிகிறது. இறந்தவர்கள் 25 லட்சம் பேர், இடம் மாறியவர்கள் 40 லட்சம், இரண்டு இடங்களில் அதாவது இரட்டை பதிவு கொண்டவர்கள் 5 லட்சம் என மொத்தம் 70 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ஒரு பக்கம் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிசம்பர் 16ம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.